Showing posts with label லக்ஷ்மணன். Show all posts
Showing posts with label லக்ஷ்மணன். Show all posts

Sunday, January 12, 2020

கம்பனும், கருத்து சுதந்திரமும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-16)



Image Courtesy : Raja Ravi Press (Public Domain)

சூடான நெய்யில் ஜீரகம் போட்டு  ரசத்திற்கு தாளித்து விட்டு கேசை ஆஃப் செய்யவும்,

"காச் ......மூச்" என்று சத்தம் காதில் விழவும் சரியாயிருந்தது.

'யாரது சண்டை  போடுவது?' .... என்று ஹாலுக்குள் எட்டிப் பார்த்தேன்.

என்னவரோ டிவியை விட்டு கண்ணையே எடுக்கவில்லை.
அட...சண்டை மண்டை உடைந்து கொண்டிருந்தது டிவியில் தான்.

சாதரணமாகவே அரசியல் எனக்குப் புரிபடாத ஒன்று.  அதிலும் இந்த டிவி சண்டைகளில் எல்லாம் ஆர்வமே இருப்பதில்லை எனக்கு.

இவருக்கு மட்டும் எப்படி இந்த சண்டை புரிகிறது? இல்லை வெட்டி சீன் போடுகிறாரா? ...பார்த்து விடவோம் என்று நானும் சண்டையை கவனிக்க ஆரம்பித்தேன்.

"கருத்து சுதந்திரம் இல்லை.... கருத்து சுதந்திரம் இல்லை.... "என்று விடாமல் ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். வேறு யார் பேசுவதும் காதில் விழ விடாமல் மீண்டும் மீண்டும் " கருத்து சுதந்திரம் போயே போச்சு. நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடையாது ." என்று உச்ச ஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார்.

எனக்கு சுத்தமாக புரியவேயில்லை. "மஹானுபவரே!இப்படி உச்சஸ்தாயில், கருத்து சுதந்திரம் இல்லை என்று கத்தும் அளவுக்கு உங்களுக்கு நாடு சுதந்திரம் கொடுத்திருக்கே.வேறென்ன கருத்து சுதந்திரம் போச்சு என்கிறீர்கள்? இந்தியாவுக்கே கேட்கிறார் போல கத்துகிறார்.  பிறகு என்ன சுதந்திரம் இல்லை என்கிறார்? ஒன்றுமே புரியவில்லை

சரி ..போ... அரசியலாவது ஒன்றாவது....என்று தோன்றியது எனக்கு. என்னவோ கத்திக் கொண்டு போகட்டும். நமக்கும் அரசியலுக்கும் எட்டாத தூரம் என்று விட்டு விட்டேன். 

ஆனால் இந்த சமயத்தில் கம்பனை நினைக்காமல் இருக்க முடியவில்லை....

விசுவாமித்திரர் ராம லக்‌ஷமணர்களை அழைத்துக் கொண்டு காட்டு வழியே நடந்து செல்கிறார்.

நாமும் காட்டு வழியே அவர்களைப் பின் தொடர்ந்த்து செல்வோம் வாங்க...
(கற்பனையிலாவது பரந்தாமனை காண்போம் வாங்க..)

சுவாரஸ்யமான உரையாடல் ...

"தசரத குமாரர்களே ! இங்கு தான் அருகே என் பர்ண சாலை இருக்கிறது. அங்கு தான் நாங்கள் யாகம் செய்கிறோம். அந்த யாகத்திற்கு இடையூறு வராமல் காக்கவே உங்களை அழைத்து வந்தேன்." விசுவாமித்திரர் சொல்ல..

பணிவுடன் ராம லக்ஷ்மணர்கள் " அப்படியே செய்கிறோம்." என்று சொல்ல

விசுவமித்திரர் மேலே தொடர்ந்தார்...
" அரக்கர்கள் மாமிசங்களையும், ரத்தத்தையும் மழையெனப் பொழிந்து எங்கள் யாகத்தை கெடுக்கிறார்கள்.அதிலும் அந்தத் தாடகை இருக்கிறாளே....அப்பப்பா....என்ன கொடூரம்! ....என்ன கொடூரம்!  பார்ப்பதற்கு  பெரிய எரிமலை ஒன்று நடந்து வருவது போலத் தோன்றும்..அவளைப் பார்த்தால் எமனே நடுங்கி ஒளிந்து கொள்வான் என்றால் பார்த்துக் கொள் ...ராமா"

"அவள் செய்யும் அட்டகாசம் தாங்கவே முடியாது..அவளைத் தான் முதலில் நீ அழிக்க வேண்டும் ராமா." என்று சொல்லி முடிக்கவும் 

ராமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "போரில் பெண்ணைக் கொல்வது தர்மம் இல்லையே.அதிலும் நான் செய்யப் போகும் கன்னிப் போர் இது...  ஒரு பெண்ணைக் கொன்று தர்மத்தை மீறுவதா? 
Killing a woman is a crime in war protocols.That too in my maiden ordeal.... OMG!
ஆனால் ஆசானையும் அவமதிக்க முடியாது.என்ன செய்வது....மனம் பிசைகிறது ராமனுக்கு.  
(பெண்ணென்றால் பேயும் இரங்கும். கருணையின் வடிவமான பரந்தாமனுக்கு சொல்லவும் வேண்டுமா.?)

 முனிவரிடம் பெண் கொலைப் பாவம் இல்லையா? கேட்டுப் பார்ப்போமா? நினைத்துக் கொண்டான்.  உடனே மனதை மாற்றிக் கொண்டு விட்டான் ராமன்.

பிறகு, வேறு வினையே வேண்டாம். .அடுத்த கணமே ," எனக்குத் தெரியாத தர்மம், பாவ புண்ணியம் எல்லாம்  சிறுவர்களாகிய, உங்களுக்குத் தெரிந்து விட்டதோ என்று முகம் 'ஜிவுஜிவுக்கக்' கோபப் படுவாரே...அதோடு விடுவாரா?. இந்தாப் பிடி... 'சாபம்' என்று சபித்து விடுவாரே"  நினைத்துக் கொண்டு அமைதி காத்தான் ராமன்.

ராமனுடைய பேரமைதியை வைத்தே புரிந்து கொண்டு விட்டார் விசுவாமித்திரர். பரந்தாமனுக்கே பாடம் எடுக்கும் ஆசான் ஆயிற்றே! அவருக்குத் தெரியாதா?

ராமனைப் பார்த்து," ராமா அவளை நீ பெண்ணென்று நினைக்கிறாய். ஆனால் அவள் ஒரு அரக்கி ... என்று அவளுடைய History, Geography எல்லாம் சொல்கிறார்."

மேலும் தொடர்கிறார்...." அவள் இந்தக் கானகத்தில் ஒருத்தரை விடவில்லை. தரையெல்லாம் பார். மண் சிவப்பாக இருப்பது இவள் உபயம் தான். எல்லோரையும், அடித்து சாப்பிடுவதே அவள் பழக்கம்." என்று சொல்லி விட்டு ராமனைப் பார்த்தார் முனிவர்.

இவ்வளவு சொல்லியும், ராமன் வில்லில் நாணேற்றாமல் அமைதியாய் இருந்தான்.

புரிந்து விட்டது விசுவாமித்திரற்கு,"ராமா நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று புரிந்து விட்டது ராமா. ஒருத்தரை விடாமல் கொல்கிறாள் என்று சொல்வதற்கு என்னையும், மற்ற ரிஷிகளையும் உயிரோடு விட்டு தானே வைத்திருக்கிறாள். அப்படி முனிவர் சொல்வது போல் ஒன்றும் கொடூரமானவள் இல்லை போலிருக்கிறது." என்று தானே நினைக்கிறாய்.

ராமா ! நானும் மற்ற ரிஷிகளும் அவளுக்கு "Noodles" போல் தெரிகிறோம் என்று நினைக்கிறேன்.  அவளுடைய பசிக்கு நாங்கள் அவள் கடை வாய் பற்களுக்குக் கூட காண மாட்டோம். அதனால் தான் எங்களை விட்டு வைத்திருக்கிறாள். நானே இன்னும் சற்று புஷ்டியாக இருந்திருந்தால் இன்னேரம் என்னையும் கொன்று முடித்திருப்பாள். அவளை பெண் என்றே எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தயங்காமல் வில்லை எடு.. நாணேற்று...தாடகையை வதம் செய்! என்று விசுவாமித்திரர் முடித்தார்.

கம்பர் இதை எப்படி நான்கே வரிகளில் சொல்கிறார் என்று பார்ப்போமா?...

தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்


மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! 

தீமை  என்று இருப்பவையாகிய  எல்லாச் செயல்களையும்  செய்துமுடித்து, எம்மைப் போன்ற  முனிவர்களைச் (சாரமில்லாத) சக்கை  என்று  உண்ணாது  விட்டாள். அவள் செய்த தீய செயல்களில்  இதுவே  குறை. இத்தகையவளை  என்னவென்று  நினைப்பது? மணிகளாலான  அணிகலன்களை  அணிந்திருக்கும் ராம பிரானே!இத்தகைய  கொடுஞ்செயல்   உடையவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது . 

அருமையாக இல்லை கம்பனின் படைப்பு...! ரசித்துக் கொண்டிருங்கள்...
மற்றொரு கம்பராமாயணப் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.


Monday, December 9, 2019

கம்பனும், கொடியும்.(கம்பன் என்ன சொல்கிறான்-14)



Image Courtesy : Google.

" அங்கே பாருங்க .  அவள் கூப்பிடறாள் பாருங்க.."


"யாரு?.....யாரை?"

"நம்ம ரெண்டு பேரையும் தான்."

யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று கூட்டத்தின் நடுவில்.. கணவன் துழாவிப் பார்க்கிறான். யாரையும் காணவில்லையே....யாரை சொல்கிறாள் இவள் .

தி.நகர் தீபாவளி நெரிசலில் எளிதில் கண்டு பிடித்து விட முடியுமா என்ன?

"தெரியலையாங்க... அதாங்க  ...... வணக்கம் சொல்லி கூப்பிடுகிறாள் பாருங்க அந்தப் பெண்."

மனைவி யாரைக் காட்டுகிறாள் என்று புரிந்து போனது கனவனுக்கு.

ஜவுளிக் கடை பொம்மை.

அந்த ஜவுளிக் கடைக் கூட்டம் மட்டும் பயமுறுத்தவில்லை.பர்சின் கனமும், கணிசமாய் குறையுமே என்கிற பயம் தான் கணவனுக்கு. 

சாமர்த்தியமாக சமாளித்தான் கணவன்..
" அடி அசடே ! அந்த மெஷின் பொம்மை சொல்றது உனக்குப் புரியல ?

என்ன?

"நன்றி!.. வீட்டுக்குப் பத்திரமா போய் வாருங்கள் " அப்படின்னு சொல்லுது.  போகலாம் வா.. என்று கணவன் சொல்ல...மனைவி "க்கும்...."என்று கழுத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.


மெஷின் பொம்மை "வா" என்று சொல்வதில் என்ன அதிசயம் சொல்லுங்கள். 
மிதிலை நகரக் கொடிகள்  செய்வதைப் பாருங்கள்...

தூரத்தில் விசுவாமித்திரர், ராம லஷ்மணர்களுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  வயதானதால் ஏற்பட்ட அசதியோ என்னவோ... ஒரு சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் போலும்.
அவர் நின்றதும், பின்னால் வந்த தசரத குமாரர்களும் 'பிரேக்' அடித்தாற் போல் நின்று விடுகிறார்கள் .  குருவைத் தாண்டிப் போய் விடக் கூடாதல்லவா? அதோடு விசுவாமித்திரர் கோபம் பிரசித்திப் பெற்றதாயிற்றே. எதற்கு வம்பு ? அவர் வாயில் விழுந்து புறப்பட வேண்டுமா ? என்றும் இவர்கள் நின்றிருக்கலாம்.

சரி. எதற்கோ நின்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அதுவும் மிதிலைக்கு மிக அருகில்....

மிதிலையில் சீதாவின் சுயம்வரத்தை முன்னிட்டு கோலாகலமாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எங்கும் மலர்களாலும், கொடிகளாலும், தோரணங்களாலும்....

ராம லக்‌ஷமணர்கள் வருவதை முதலில் பார்த்தது இந்தக் கொடிகளாய் தான் இருக்கும். உயரத்தில் இருப்பதால்..

ராஜகுமாரி சீதையை மணமுடிக்கப் போகும் ராமன் வருவதைப் பார்த்து கொடிகள் மகிழ்ச்சியில்  ஒன்றொடு ஒன்று கைக் கோர்த்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தன. (தூக்குத் தோரணக் கொடிகள் - அதாவது மாவிலைத் தோரணம் போல் கட்டப்பட்டக் கொடிகள்.)

அவர்கள் பிரேக் போட்டதைப் பார்த்ததும், கொடிகள் ," என்னடா இது? இவர்களுக்கு மிதிலைக்கு வழித் தெரியவில்லையோ? Google Map பார்க்க வேண்டியது தானே." பேசிக் கொண்டனவோ.

"ராமா ..... வாடா.... ராமா...நீ எங்கே left, Right என்று திரும்பிப் பாக்கறே? மிதிலை இங்கே தான் இருக்கு.  உன் கரம் பற்றப் போகும்  சீதை இங்கு தான் இருக்கிறாள். " என்று கத்த வேண்டும் போல் இருந்திருக்கும்.

ஆனால் கொடி ஆயிற்றே! எப்படிக் கத்த முடியும் சொல்லுங்கள். 

அதனால்....master plan செய்து விட்டு கை கோர்த்துக் கொண்டு ரெடியாக காத்துக் கிடந்தன.

ஒரு பெரிய காற்று அடித்தது. தங்கள் பிளானை நிறைவேற்றிக் கொண்டன...எப்படித் தெரியுமா?

எல்லாம் ஒன்றாக காற்றில் மேலே பறந்து ராமனைப் பார்த்து," வா...வா...." என்பது போல் பட..பட...என்று அடித்துக் கொண்டனவாம்.

கம்பனுக்கு மட்டுமே இப்படியொரு கற்பனை உண்டாகும்..

இதை விவரிக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போமா...

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்: என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


காவல் மிக்க அந்த மிதிலை நகரம்," திருமகளானவள் குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து, நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால் என்னிடம் வந்து பிறந்துள்ளாள்" என்று கூறி பெரிய அழகிய கொடிகள் என்கிற தன் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டுவது, தாமரைப் போன்ற கண்களைக் கொண்ட ராமனை விரைவில் வந்து சேர்க என்று அழைப்பதைப் போன்றுள்ளது.

கம்பன் சொல்லும் காட்சி .....வீடியோவாய் உங்களுக்கு விரிந்திருக்குமே! ரசித்துக் கொண்டிருங்கள்....

வேறொரு கம்பனின் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்..
நன்றி.

Monday, December 2, 2019

கம்பனும், கொசுவும் ( கம்பன் என்ன சொல்கிறான் - 13)




பட உதவி ; www.dinakaran.com

'ஙொ....ய் ... 'சத்தம் சன்னமாய் வந்தது.
"காதருகில் 'கிசு கிசு' என்று கொசு என்ன ரகசியம் சொல்கிறது. " கிண்டலாக அவரிடம் கேட்டேன்.

" Please Wait. சீக்கிரமே உன் காதுக்கும் கொசு வழியாகவே அந்த ரகசியம் எட்டும்." அவரும் பதிலுக்குக் கிண்டலடிக்க, 
(கொசு விரட்டிக்கெல்லாம் 'பெப்பே' என்கிறது கொசு.)

கொசுவைப் போல வண்டுகளும் ரீங்காரம் செய்யுமே.

வாங்க...மிதிலைக்குப் போய் அதையும் பார்த்து விடலாம்.

மிதிலாபுரி சொர்க்கபுரியாக காட்சியளிக்கிறதே!
மக்களெல்லாம் என்ன மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஆடுவதும், பாடுவதுமாய்... இருக்காதா பின்னே. திருமகளே அங்கே அவதரித்திருக்கிறாளே! வளத்திற்கு என்ன குறைவு இருக்கப் போகிறது சொல்லுங்கள்.

சரி....விஷயத்திற்கு வருவோம்...வண்டுகளும் கூட்டம் கூட்டமாய் ரீங்காரம் செய்கின்றன.

அப்படி என்ன தான் ரகசியம் பேசுகின்றன? கேட்போமா?

" எதுக்கடி இப்படி கத்தறே..அதுவும் என் காது கிட்ட வந்து?"

" அதுவா... அங்க பார். அந்தப் பெண்ணை ."

" ஏன் அவளுக்கு என்ன?"

அதற்குள் இன்னொரு வண்டு வீல் என்று அலற,

'உனக்கென்ன ஆச்சு?'

'அந்தப் பெண் படும் பாட்டைப் பார். எனக்குப் பயமா இருக்கு.'

கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவு வண்டுகளும் பதட்டத்துடன் பேசிக் கொள்கின்றன.

'எனக்கும் பயமா இருக்குடி. இந்தப் பெண்கள் ஆடும் ஆட்டத்தில் அவர்களின் மெல்லிய இடை வலிக்காதோ? எவ்வளவு மெல்லிய இடை. ஆட்டத்தின் அதிர்ச்சியைத் தாங்குமா?  '

இதைத் தான் அந்த வண்டுகள் பேசுகின்றனவாம்.

அப்படி என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் மிதிலாபுரி பெண்கள்?

ஊஞ்சல் தான்..... வேறொன்றுமில்லை.

எங்கே இருக்கு ஊஞ்சல்?

பாக்கு மரத்தில்.....


சரி... இந்த வண்டுகள் எங்கிருந்து வருகின்றன. வேறெங்கேருந்து? பெண்கள் வேகமாக ஆடும் போது, அதிர்ச்சியினால் அவர்கள் சூடியிருக்கும் பூக்களிலிருந்து தான் மேலே எழும்பியிருக்கின்றன. 

அவை மேலே எழும்பும் போது ஏற்படும் ஆரவாரம், பெண்களின் இடைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதைப் போல் இருந்ததாம் கம்பருக்கு. (கற்பனையில் கம்பருக்கு இணை கம்பரே!)


'மாசுறு பிறவி போல'  ஊஞ்சல் ஆடுவதை வர்ணிக்கிறார்.
 இறைவனடி சேர்வதும், பிறப்பெடுப்பதும் எப்படி மீண்டும் மீண்டும் நடைபெறுகிறதோ அப்படி ஊஞ்சல் முன்னும் பின்னுமாய் ஆடுகிறதாம்.
(கம்பரைத் தவிர யாரால் இப்படி ஊஞ்சல் ஆடுவதற்கு உவமை சொல்ல முடியும், சொல்லுங்கள்.)

ஒரேயடியாக தத்துவத்தில் நம்மை மூழ்கடித்து விடாமல் ' மைந்தர்  சிந்தையொடு உலவ' என்று சட்டென்று ஜனரஞ்சகமாக சொல்லி முடிக்கிறார்.
அதாவது, இடை மெலிந்த அழகான பெண்கள் ஊஞ்சலாடும் போது, அவர்களைப்  பார்க்கும் இளைஞர்கள் மனமும் கூடவே ஆடியதாம்.

பால காண்டம் . மிதிலைக் காட்சிப் படலம். பாடல் எண். 573.

பூசலின் எழுந்த வண்டு 
  மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல 

  வருவது போவது ஆகிக்,
காசு அறு பவளச் செங்காய் 

   மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் 

 சிந்தையொடு உலவக் கண்டார்.  

குற்றம் அற்ற பவளம் போல சிவந்த காய்களையுடைய, மரகதம் போல பச்சை நிறப் பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே பெண்கள் ஆடுகிறார்கள். குற்றம் நிறைந்த பிறவி போல (மாறி மாறி) வருவதும், போவதுமாக ஊஞ்சல்  ஆட, (பார்க்கும்)  ஆண்களின் மனமும் கூடவே ஆடுகின்றன. ஆரவாரத்தோடு மேலே எழுந்த வண்டுகள் அவர்கள் இடையின் மென்மைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதையும் (ராம லக்குமணர்) பார்த்தார்கள்.  

ஒரு வீடியோ பதிவைப் போல் இருக்கும் இந்த  வரிகளில் மெய் மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறதே!

இன்னொரு கம்பர் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.

Tuesday, November 19, 2019

கம்பனும், காதலும்(கம்பன் என்ன சொல்கிறான்-11)


Google Images

'ஜானு.....ஜானு ' இது அம்மா கூப்பிடும் குரல்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு,
மீண்டும்,'ஜானு.....' என்று அம்மா குரல் கொடுக்க ஒரு பதிலும் வரவில்லை.

கையில் சாம்பார் கரண்டியுடன், அம்மா ஹாலுக்குள் எட்டிப் பார்க்க, டிவி மட்டும் அனாதையாய் அழுது கொண்டிருந்தது.

'எங்கே தொலைந்தாள் இவள்.' முணுமுணுத்துக் கொண்டே  அம்மா அறையில் எட்டிப் பார்க்க... அங்கே ஜானு கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன் அழகை தானே ரசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா கூப்பிட்டது ஒன்றும் ஜானு காதில் விழுந்தமாதிரி தெரியவில்லை. 'என்னாச்சு இந்த பெண்ணுக்கு?' அம்மா நினைக்கவும்,  படுக்கை மேல் கிடந்த ஜானுவின் போன் இனிமையாய் ஒலிக்கவும் சரியாயிருந்தது.

போன் ஒலியாலும் ஜானுவின் கண்ணாடி தியானத்தைக் கலைக்க முடியவில்லை போலும்.

அம்மாவிற்குப் புரிந்து விட்டது ஜானுவுக்கு  என்னாச்சுன்னு.

உங்களுக்கும் புரிந்திருக்கும்..இனி ஜானுவாச்சு, அவள் அம்மாவாச்சு....

மேலே சொன்னது டீ.வி சீரியல் ஒன்றின் காட்சி.

கம்பராமாயணத்தில் சீதையும் இப்படித்தான் இருக்கிறாளாம்.

எப்போலேருந்து?

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதிலிருந்து தான் இந்த வியாதியாம் சீதைக்கு.


சீதையின் நெருங்கிய தோழிகள்,'நம் ராஜகுமாரிக்கு என்னாச்சு?' ஏன் இப்படி விட்டத்தையே வெறித்துப் பார்ப்பதும், தனக்குள்ளே சிரிப்பதும்......ஒன்றும் சரியில்லையே " சொல்லிக் கொள்கிறர்கள்.

சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை  'சீதை! சீதை! என்று கூப்பிட சீதை எதையோ நினைத்து தனக்குள் புலம்புகிறாள்.

நீலமாலை சீதையின் தோளைப் பிடித்து உலுக்கி," என்னடி ஆச்சு உனக்கு. என்னடி புலம்புகிறாய்?" கேட்க....

'எனக்கென்ன ஆச்சு? ஒன்றும் இல்லையே ! ஒன்றும் இல்லையே!' சீதை அவசர அவசமாக உரைத்தாள்.

'ஆனால் எனக்குப் புரிஞ்சு போச்சுடி' நீலமாலை சொல்லவும், சீதை பொய்க் கோபத்துடன்,' என்னடி உனக்கு இப்ப புரிஞ்சு போச்சு.?' முறைத்தாள்.

'நீயும் நானும் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பலேருந்து தான் நீ இப்படி இருக்கிறாய்.' சொல்லிக் கொண்டே சிந்திக்க ஆரம்பித்த நீலமாலை தொடர்ந்தாள்...
'ஆ....தெரிந்து விட்டதடி. விளையாடும் போது வெளியே நடந்து போகும் ஒருவரை நீ  கவனிப்பதையும், அவர் உன்னை பார்த்ததையும் கவனித்து விட்டேனடி சீதை.'

'போடி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் யாரையும் பார்க்கலை.' சீதை பொய்யாக மறுத்தாள்.

'சரி விடு சீதை. நீ ஒருவரைப் பார்த்தாயே...அவர் எப்படி இருந்தாரடி' நீலமாலை கேட்க...

சீதை , "அவரா! நான் எங்கேடி அவரைப் பார்த்தேன். அவருடைய 'கரு கரு' கூந்தலைத் தானே  நான் பார்த்தேன்." முகத்தில் வருத்ததுடன் சொன்னாள்.

"ஓ....அவரைப் பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா? அவருடைய கருமையான கூந்தலுக்கே உன் மனம் அலை பாயுதோ" கிண்டலடித்தாள் நீலமாலை.

"ஆனால் அவருடைய முகம் எப்படி இருந்தது தெரியுமா? பௌர்ணமி நிலா மாதிரி இருந்ததடி. " சீதை வெட்கத்துடன்  தொடர...

'ம்ம்ம்ம்....அப்புறம் ?' நீல மாலை மற்றத் தோழிகளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.

சீதையோ தன்னை மறந்து, 'அவருக்குத் தான் எத்தனை நீளமான கைகள். முழங்கால் வரை நீண்ட கைகள்.' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு , கண்களில் காதலுடன் சொல்ல....

"அப்புறம் இன்னொன்றை சொல்லனும் நீல மாலை . " 

"என்னடி சொல்லனும்?" நீலமாலை ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு சீதையை கேட்க..

"அவருக்கு....அவருக்கு  பெரிய நீலமணி மலைகள் போன்ற தோள்கள் ." என்று சீதை சொல்லி விட்டு ....தன்னை சுற்றிப் பார்த்தாள் . தோழிகள் எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சீதை, வெட்கத்துடன் கைகளால் தன் முகத்தை மறைக்க ....

நீல மாலை, அவள் கைகளை எடுத்து விட்டு, " ஆக...அவருடைய கூந்தல், சந்திர வதனம், கைகள், தோள்கள் .....இவையெல்லாம் தான் உன்னைக் கவர்ந்ததோடீ? " கேட்கவும்,

சீதை சட்டென்று அவசரமாக மறுத்தாள்.'ம்ஹூம்.... இவையெல்லாம் என்னைக் கவர்வதற்கு முன்பாக....' இழுத்தாள்.

"கவர்வதற்கு முன்பாக.....? சீக்கிரம் சொல்லுடி சீதை" நீலமாலை ஆர்வத்துடன் கேட்கவும்,

"அவருடைய புன் முறுவல் என் உயிரை அவருடனேயே எடுத்து சென்று விட்டதடி." சீதை சொல்லி விட்டு வெட்கத்துடன் அங்கிருந்து ஓடவும்...

தோழிகள் ,கொல்லென்று சிரித்துக் கொண்டே சீதையைத் துரத்தவும்..., 

நீ ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல் சொல்கிறாயே. என்று என்னைக் கேட்கிறீர்களா?

நானாக சொல்லவில்லை. ராமனைப் பற்றி சீதை சொன்னதாக கம்பன் சொன்னது அப்படியே கண் முன் காட்சியாய் விரிந்தது. அவ்வளவே.

நீங்களும் படித்து ரசியுங்களேன்.....
பால காண்டம்.மிதிலைப் படலம். பாடல் எண் 619

இந்திரநீலம் ஒத்துஇருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.

இந்திர நீலம் என்கிற மணிக்கு ஒப்பாக கருத்த முடியும், முழு நிலவு போன்ற முகமும், முழங்கால் வரை தொங்கும் கைகளும், அழகிய நீல மணி மலைகள் போன்ற தோள்களும் என்னும் இவையே அல்ல.  அவ்வாறாயின், பின் யாது என்றால், அந்தப் புன்னகை தான் இவை எல்லாவற்றுக்கும் முற்பட்டு என் உயிரை கவர்ந்தது.

படித்தவுடன் உங்களுக்கும் மனதில் காட்சி விரிந்திருக்குமே. காட்சியை ரசித்துக் கொண்டிருங்கள்.

மற்றொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...
நன்றி.


Sunday, November 3, 2019

கம்பனும், Negotiationம்.(கம்பன் என்ன சொல்கிறான்?-9)







கம்பனும் Awardம் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எப்பவும் போல் பிரேக்பாஸ்ட் தயாரிக்க சென்றேன். 

"இன்றைக்கு என்ன?" என்னவர் கேட்க....

"இன்றைக்கு இடியாப்பம் செய்யட்டுமா? இட்லி, தோசை, உப்புமா...என்று எனக்கே போர் அடிக்குது." சொன்னேன்.

"ராஜி ! எனக்கு தோசை போதும். அலட்டிக்காதே! "அவர் சொல்ல 

ஆனால் நான் இடியாப்பம் தான் செய்வது என்கிற முடிவோடு, மாவைப் பிசைந்தேன்.

இடியாப்ப அச்சை நாழியில் போட்டு விட்டு, மாவை உள்ளே வைத்து , இட்லி தட்டில் பிழிய ஆரம்பித்தேன்.

மாவு இறங்கி வர வேண்டுமே! ம்ஹூம் .... மாவு இரக்கம் காட்டாமல் அசையாமல் இருந்தது.

ஏன் மாவு 'தர்ணா' செய்கிறது? 

அச்சில் கண் அடைச்சிருக்கோ? 
செக் செய்தேன்.  அப்படி ஒன்றும் இல்லையே....

" என்ன ரொம்ப நேரமாக சத்தத்தையே காணோம்." சொல்லிக் கொண்டே என்னவர் கிச்சனில் ஆஜர்.

அவர் பங்கிற்கு... அவரும்  முயல... மாவு மனம் இரங்கவேயில்லையே!அன்றைக்கு இடியாப்பம் கேன்சல் ஆனது தான் மிச்சம். 

இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதோ?

ஆனால், சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளத் தெரிந்த தாசரதனுக்கு, பிறகு சமாளிக்க முடியாமல் திணறி, கடைசியில் செத்தே போனான்.


எப்பவோ போர் களத்தில் கைகேயி, தசரதன் வெற்றிக்கு காரணமாயிருக்க...

அப்ப மனைவியின் மகிமையில் உச்சி குளிர்ந்து போய், " உனக்கு நான் ஏதாவது gift தரணுமே அன்பே". சொல்லியிருப்பான்.

அவளோ, "நீங்கள் என் காதல் கணவன். நீங்களே எனக்குப் பெரிய gift. தனியா நீங்க தரணுமா?" அதெல்லாம் வேண்டாம்." சொல்லியிருப்பாள்.

விட வேண்டியது தானே தசரதன். இல்லை ஏதாவது ஒரு சினிமா டிராமான்னு கூட்டிட்டுப் போய் அசத்தியிருக்கலாம். 

அதெல்லாம் ரொம்ப சின்ன கிப்ட்னு  நினச்சா, "  அருமையான ஹில் ஸ்டேஷன் எதுக்காவது டூர் அழைத்துப் போயிருக்கணும்."

இல்லை... அரசன் தானே! வைரத்தாலும், வைடூர்யத்தாலும், பவுனாலும், நகை நட்டு வாங்கிக் குடுத்து முடித்திருக்கலாம்.

அதெல்லாம் விட்டுட்டு , " கைகேயி இந்தா எடுத்துக்கோ ரெண்டு வரம் தரேன்." சொன்னா என்னத்தை சொல்றது.

குடுத்தது தான் குடுத்தானே தசரதன்," அதுக்கு ஒரு டைம் லிமிட்...? ம்ஹூம். " 
Limited Time Offerனு ஒரு catchஆவது  வச்சிருக்கலாம். அதுவும் இல்ல....

அட்லீஸ்ட் "*conditions apply " என்று மிக மிக சிறிய எழுத்துக்களால் எழுதி, குடுத்திருக்கலாம். எல்லாத்தையும் மறந்துட்டு, கைகேயின் மேலுள்ள அளவற்றக் காதலால்.... வரத்தைக் குடுப்பானேன் இப்ப முழி பிதுங்க நிற்பானேன்.

இப்ப சொல்றானாம், " என் கண்ணை வேண்டுமானாலும் எடுத்துக்கோ." அப்படின்னு..

தசரதா! கைகேயி உன் கண்ணை வச்சுகிட்டு என்ன செய்யப் போறா?அவளோட ரெண்டு கண்ணும் நல்லாவே இருக்கு! 

போதாததுக்கு அவளோட கண் அல்லவா உன் சேர் மேல் விழுந்துடுத்து. . 

"Your Highness! Power mongering Kaikeyi needs your chair  & not your eye. " என்று தசரதனைப் பார்த்துக் கத்த வேண்டும் போல் இருக்கு.

இதையும் தாண்டி தசரதன், "என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கோ !" அப்படின்னு சொல்றானாம். 

இல்லை....இல்லை....பயமுறுத்துறானாம்.

கைகேயி " ஹ.....இது பனங்காட்டு நரி..இந்த சலசலப்புக்கு அஞ்சாது." என்று நினைத்திருப்பாளோ.

தசரதனுக்குப் புரிந்தது இவள் மசியவில்லை என்று. 

அடுத்து   negotiation tableற்குக் கூப்பிட்டுப் பார்க்கிறானாம்...

அவளிடம் ," உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஓகே ! பரதன் நாடாளும் வரம்-தந்து விடுகிறேன். இன்னொரு வரம் என்று ஒன்று கேட்டாயே! அதை மட்டும்... ப்ளீஸ்.... விட்டு விடேன் கைகேயி." என்று கெஞ்சுகிறானாம்.

அவனால் 'ராமன் காடு புகும் வரம்' என்று சொல்லக் கூட முடியவில்லை பாருங்கள். 'இன்னொரு வரம் 'என்று மட்டுமே சொல்கிறானாம்.

(என்னைக் கேட்டால் ,'ராமன், சீதை, லக்‌ஷ்மணன் 14 ஆண்டுகள் காட்டில் கஷ்டப்பட்டதற்கு, கைகேயி காரணம் இல்லை தசரதா! நீயும், உன் வரங்களும் தான் காரணம்' என்று சொல்வேன்.)

கம்பன் எவ்வளவு அழகாக இந்த சீனை நாலே வரியில் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்...
 அயோத்யா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்  1611.
'கண்ணே வேண்டும் என்னினும்
ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும்
இன்றே உனது அன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!
பெறுவாயேல்
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
மற' என்றான்

'பெண்னாகப் பிறந்தவளே! வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே! என் கண்களே வேண்டும் என்றாலும் நான் உனக்குக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன். எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை விரும்பினாலும், இப்பொழுதே உன் வசமல்லவா? வரத்தையே பெற விரும்புவாயானால் நாட்டை மட்டும் பெற்றுக் கொள்கொள்வாய். மற்றொரு வரத்தை மட்டும் மறந்து விடு' என்றான்.

ஒரு மன்னன் எவ்வளவு கீழே இறங்கி கெஞ்சுகிறான் பாருங்கள். 

தேவையா தசரதா உனக்கு இது? யோசி....

 நன்றி...வேறொரு கம்பனின் பாடலுடன் சந்திக்கிறேன்.

Friday, October 18, 2019

கம்பனும், தையல் மெஷினும் .(கம்பன் என்ன சொல்கிறான்?-7)



Image courtesy: Wikkimedia Commons
கம்பனும் Hidden Agendaவும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

"விநாச காலே விபரீத புத்தி " என்று சும்மாவா சொன்னார்கள்.  கையடக்கமான தையல் மெஷினை, கையடக்கமான விலையில் ஆன்லைனில் வங்கியாச்சு.


உடனே 'கட கட' வென்று போனது வந்தது என்று எல்லாம் தைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப என் புது புடைவை ஓரம் அடிக்கப் போகிறேன்" சொல்லிக் கொண்டே மெஷினில் புடைவையை ஓரம் மடித்து தைக்க ஆரம்பித்தேன்..

சில வினாடிகள் தான்.... சத்தம் ஒரு மாதிரியாக வர..பார்த்தால் தையல் விழவில்லை. பதறிப் போய் என்னவென்று பார்த்ததில்....பாபினில் நூல் காலி.

மெஷினிலும் பாபினில் நூல் சுத்தும் வசதி வைக்கவில்லை என்பது எனக்குப் புரிய ஒரு மணி நேரம் ஆச்சு.

மெஷினை வாங்கும் முன்பு இந்த பாபின் விஷயத்தை நான் கவனித்திருக்க வேண்டாமோ?  விட்டு விட்டேனே.என் மூளைக்குக்கு எட்டவில்லையே! என்னை நானே திட்டிக் கொண்டேன்...

கைகேயியும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டாள் என்பதை மந்தரை எடுத்து சொன்ன பிறகு தான் புரிந்திருக்கிறது அவளுக்கு.

எப்படின்னு பாக்கலாம் வாங்க...

ராமனுக்கு முடி சூட்டு விழா என்று மந்தரை சொன்னது கைகேயிடம் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.மாறாக சந்தோஷப் படுகிறாள். (அவள் தான் ஒரு Hidden Agenda வைத்திருந்தாளே. அது என்ன? என்று கேட்பவர்கள் இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.)

மந்தரைக்கு கைகேயின் மகிழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்தியது. அவளும் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாள்...

பரதன் உனக்கு மகன் தானே! அவன் நலனில் உனக்கு அக்கறை இல்லையா? கௌசல்யாவிற்கு ஏவல் செய்யப் போகிறாயா? 
மூத்தவனுக்குத் தான் மணி முடி என்றால் , தசரதன் இருக்கும் போதே எதற்கு ராமனுக்கு மணி முடி? - இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்து கைகேயியை அசைக்கப் பார்க்கிறாள் மந்தரை.

கைகேயி மசியவில்லையே!

மந்தரைக்குப் புரிந்து விட்டது. இவள் இப்படியெல்லாம் சொன்னால்  மசிய மாட்டாள். என் முதுகைக் காயப்படுத்திய ராமனுக்கு மணி முடியா? எப்படியாவது தடுக்க வேண்டுமே...யோசித்தாள் மந்தரை...

அம்மா வீட்டு sentiment தான் இதற்கு சரியான வழி என்று தீர்மானித்து, " இதைக் கேள் ராணி... இத்தனை நாள் சீதையின் அப்பா ஜனகன் , உன் அப்பா கேகய மன்னனுடன் சண்டைக்குப் போகாமல் இருந்ததுக்கு யார் காரணம். தெரியுமா?"

"உன் ஆம்படையானுக்கு (தசரதனுக்கு) பயந்து தான்."

"ராமன் ராஜாராமன் ஆகி விட்டால்... . ...அவ்ளோதான்......ஜனகனுக்கு நல்லாவே குளிர் விட்டுடும். சொல்லிட்டேன். மாமனார் பின்னாடியே,  ராமனும் வில் அம்புடன் புறப்பட மாட்டான்னு என்ன நிச்சயம் சொல்லு?

ஆக... உன்னாலான உபயத்தை உன் பிறந்த வீட்டுக்கு செய்யப் போறே ! ஓகே! நான் யார் அதைத் தடுக்க.."

இதைக் கேட்டதும், கைகேயி சட்டென்று மந்தரையைப் பார்த்தாள்.

தன் செயலால்  தன் அம்மா வீட்டிற்கு ஒரு துண்பம் என்றால் எந்தப் பெண் தான் அதை செய்வாள்.

இந்த அம்மா வீட்டு செண்டிமெண்ட் 'பசக்' என்று பிடித்துக் கொண்டது .

இது தான் சமயம் என்று இன்னும் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் , " அது மட்டுமா ராணி. இன்னும் கேள்...ராமன் மன்னன் என்றால் லஷ்மணனுக்கு சரிசமமான மரியாதை கிடைக்கும். ஆனால் பரதனுக்கு அது கிடைக்குமா?" என்று கேட்டாள்.

இதை மட்டுமா கேட்டாள்? 

" நாளை ராமனுக்கு குழந்தைகள் பிறந்தால், கௌசிப் பாட்டி...கௌசிப் பாட்டி ன்னு கௌசல்யாவைக் கொண்டாடுமா?உன்னையா? யோசிச்சிக்கோ. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனிமேல் உன் இஷ்டம்." என்று சொல்லியிருப்பாள். 
(கம்பன் சொல்லவில்லை இதை . என் யூகம் இது.)

அதனால் தான் கைகேயி மனம் மாறியிருக்க வேண்டும்.  
" ஆமாம் இல்ல... இதெல்லாம் விட்டு விட்டேனே.என் மூளைக்கு தோணவேயில்லையே! நல்ல வேளை இப்பவாவது மந்தரை சொன்னாளே" என்று மனம் மாறிய கைகேயி

மந்தரையிடமே இதற்குத் தீர்வும் கேட்கிறாள்.
 அதற்கு மந்தரை ," உன்னிடம் தான் தசரதன் குடுத்த இரண்டு வரம் இருக்கே  . அதை இப்ப கேட்காமல் அப்புறம் எப்ப கேட்க போறே ராணி."

"பரதன் நாடாள - ஒரு வரம்..
ராமன் காடு புக  - ரெண்டாம் வரம்.அவ்ளோ தானே.சகல பிரச்சினையும் முடிஞ்சுடும் .இல்லையா ராணி." 

நம்மைப் போலவே கைகேயியும் குழம்பியிருக்க வேண்டும்.

பரதன் நாடாளும் வரம் ஓகே...
ராமன் காடு புகும் வரம்- Why Mantharai? Why?

அங்க தான் மந்தரையின் சூழ்ச்சி தெரிகிறது. ராமன் அயோத்தியிலேயே இருக்க, பரதன் ஆட்சி செய்தால் என்ன ஆகும்?
மக்களின் "Sympathy wave" ராமனுக்குக் கிடைத்து விடுமே.அது பரதனுக்கு ஆபத்தாக முடியலாம்.
ராமன் காட்டிற்குப் போனாலும் 'sympathy wave' இருக்கத் தான் செய்யும். ஆனால் சில நாட்களில் மக்கள் ராமனை  மறந்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். மக்கள் ராமனை சுத்தமாக மறக்க ஓரிரு வருடங்கள் போதாது. நிறைய நாட்கள் தேவைப்படும். கேட்கறதுன்னு ஆச்சு..  பதினான்கு வருடங்கள் ராமனுக்கு வனவாசம் என்றால் சரியாயிருக்கும் என்று நினைத்திருப்பாள் மந்தரை..அதனால் தான் இந்த உபாயம் சொல்கிறாள் என்று நினைக்கிறேன்.
(என்னா வில்லத்தனம்! என்னா வில்லத்தனம்!)

கம்பனின் கவியைப் பார்ப்போமா...
அயோத்யா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம். பாடல் எண்:1577

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் 
பெரு வனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால், செழுநிலம் எல்லாம் 
ஒருவழிப் படும்உன்மகற்கு, உபாயம் ஈது என்றாள் 

அவ்விரண்டு வரங்களுள் ஒரு வரத்தால் அரசாட்சியை உன் மகனதாக ஆக்கிக் கொண்டு, மற்றொன்றினால் ராமன் பெரிய காட்டின் கண் பதினான்கு ஆண்டுகள், அயோத்தியிலிருந்து நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலைய செய்வாயாக. அப்படி செய்தால், உன் மகனாகிய பரதனுக்கு வளப்பமான உலகம் முழுதும் அடங்கி நேர்படும். இதுவே உபாயமாகும்.

இதை கைகேயி எப்படி செயல் படுத்தினாள் என்று கம்பன் சொல்வதை அடுத்தப் பதிவில் பார்ப்போமே...

நன்றி.


Thursday, October 3, 2019

கம்பனும், கஃப்தானும்.(கம்பன் என்ன சொல்கிறான்?- 5)

Image Courtesy: Google.
கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்-4) படிக்க இங்கே க்ளிக்கவும்.


பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயனித்துக் கொண்டிருந்தோம்.சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணம். 

ஒரு முதிய தம்பதி என் இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்தனர்.

'மைக்'கில்  கஃப்தான் வினய் ( பைலட்) எந்த உயரத்தில் பறக்கிறோம்.... எப்ப போய் சேருவோம்.....இத்யாதி..இத்யாதி... 'கர கர' குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

நானோ"எங்களுக்கு இந்த சங்கதியெல்லாம் தேவையில்லை கஃப்தானே! சென்னையில் பத்திரமாகத் தரையிறக்குங்கள். போதும் ." என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.(மனதில்).

சிறிது நேரத்தில் விமான பணிப் பெண் கொடுத்த ஒரு குட்டியூண்டு சோன்பப்டி, சமோசா, சாப்பிட்டு, காபி என்கிற பேரில் குடுத்ததை உள்ளே தள்ளி விட்டு, எல்லோருமே கண்ணயர ஆரம்பித்திருந்திருப்போம்.

மீண்டும் கஃதான் குரல் எங்களை எழுப்பி விட்டது.
" எல்லோரும் சீட் பெல்டை மாட்டுங்கள். தரையிறங்கப் போகிறோம்."

அதற்குள் சென்னை வந்து விட்டோமா .அப்பாடி...என்று நான் நினைக்க ஆரம்பிக்கவும்...முன் இருக்கை மாமி," சென்னை அதுக்குள்ள வந்துடுத்தா? தூக்கமா வருது " என்று சொல்லிக் கொண்டே பெரிய கொட்டாவி விட்டார்.

"ஆமாம்டி மதுரா ! ராமன் வில்லை ஒடித்த நேரத்தில் சென்னைக்கு  வந்துட்டோம் பாரேன். நீ மிச்ச தூக்கத்தை ஆத்துல போய் தூங்கிக்கலாம்."  என்று மாமா சொல்ல...

எனக்கு கம்பனின் வரிகள் நினைவில் வந்து மோதியது...

விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை ஜனகனின் அரண்மனைக்கு அழைத்து வந்து விட்டார். 

பிறகு, விசுவாமித்திரர்,ராம லஷ்மணர்களைப் பற்றி ஜனகனிடம் விரிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ராமனின் கை வண்ணம், கால் வண்ணம் என்று சொல்லிக் கொண்டே போகிறார்.

எனக்கோ பதை பதைக்கிறது. இந்த விசுவாமித்திர முனிவருக்கு விவஸ்தையே இல்லையோ.
"கை வண்ணம் , கால் வண்ணம் எல்லாம் சொல்கின்ற நேரமாய்யா இது. ராமன், ஜனகனின் மாப்பிள்ளையானவுடன், சீதை தன் அப்பாவிடம் ஆத்துக் காரர் பெருமை சொல்லிக் கொள்ள மாட்டாளா என்ன? . ஆத்துக்காரர் பெருமையை 'டமாரம்' அடிக்க பெண்களுக்கு சொல்லித் தரனுமா?
அதனால் நீங்கள் முதலில் ராமனை வில்லில் நாணேற்ற சொல்லுங்கள் முனிவரே. வேறு யாராவது முந்திக் கொண்டு விடப் போகிறார்கள்" என்று விசுவாமித்திரரிடம் கத்த வேண்டும் போல் தோன்றியது.

கம்பராமாயணம் படிப்போர் பலருக்கும்  இந்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும்.

ராமன் தானாகட்டும். வந்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல் விசுவாமித்திரர் எப்பொழுது தலை அசைப்பார் என்று காத்து கிடக்கிறானாம்." ராமா! சீதை வேணுமா இல்லையா? எழுந்திரு. இப்படி உட்கார்ந்திருந்தால் ஆகாதப்பா." என்று சொல்லத் தோன்றியது.

ஒரு வழியாக விசுவாமித்திரர் 'பிசினஸ்'க்கு வந்தார்.
ஆமாம்....
 ராமனைப் பார்த்துக் கண்ணசைவாலேயே ," ராமா போ! போய் வில்லை எடுத்து நாணேற்று " ஏன்று சொன்னாராம். 

உடனே ராமன், 'விருட்'டென்று எழுந்து போய் சிவ தனுசை கையில் அனாயாசமாக எடுத்ததைத் தான் எல்லோரும் பார்த்தார்களாம்.

" டமால்....." என்று மிகப் பெரிய சத்தம். எல்லோரும் அலறிப் புடைத்திருப்பார்கள் .

எல்லாம் ராமன் கை வண்ணம் தானாம்.

சிவ தனுசு  முறிந்த ஓசை அது. எல்லோருக்கும் ராமன் வில்லை எடுத்தது தெரியும், பின் முறித்ததைத் தான் கேட்டனராம். நாண் ஏற்றுகிறேன் பேர்வழியென்று  வில்லை முறித்தே விட்டானாம். 
"ராமா...இரு...இரு.. சிவ தனுசை முறித்ததற்கு பரசுராமருடன் ஒரு தனிப் பஞ்சாயத்து காத்திருக்கு."

ஆக.... எல்லோரும் என்ன பார்த்தார்களாம்?

"எடுத்தது கண்டனர்.இற்றது கேட்டனர்."

இதைக் கம்பன் நான்கே வரிகளில் ஒரு வீடியோ பதிவாக்கி விட்டான் பாருங்கள்.

பால காண்டம். கார்முகப் படலம்.படல் எண்:783

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.

ண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்ற யாவரும், ராமன் தன் திருவடியால் அவ்வில்லின் நுணியை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாணேற்றியதையும், ராமனின் செயலின் வேகத்தால், காண முடியாதவராயினர். அன்றியும் மனத்தாலும் இன்னது தான் நிகழும் என்று கருதவும் இயலாதவராயினர். ஆயினும் ராமன் தன் கையால் அவ்வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். பின் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.

 பாருங்களேன்..கம்பனின் காவியம் நமக்கு ராமாயணத்தை கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறது இல்லையா?

மீண்டும் ஒரு கம்பன் பாடலுடன் சந்திப்போம். 



Monday, September 23, 2019

கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-4)




Image Courtesy :Google.

வாசலில் இரண்டு மயில்கள், கழுத்தை ஒய்யாரமாக திருப்பி பார்த்துக் கொண்டிருந்தன....மாக்கோலத்தில்... 

யார் போட்டிருப்பார்கள்? நாத்தனாராய் இருக்குமோ.....
கூறைப் புடவை சரசரக்க....புது மஞ்சள் சரடும்,....மாலையுமாய்.... அவரின் கரம் பற்றி இல்லம் புகுந்தேன்...

சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தேறிய பின்னர்...வந்து உட்கார்ந்தேன்....இல்லையில்லை உட்கார வைக்கப்பட்டேன். 

ஆமாம்....கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தான் இருந்தது. எல்லோருமே புது முகம் என்னவர் உட்பட.... திரு திரு என்று முழித்துக் கொண்டு...என்னை சுற்றி நடப்பதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

"அந்த ஜமுக்காளத்தை இங்கே போடு."

" இலை வாங்க சொன்னேனே கணேசா ...வாங்கிட்டியா?"

"அக்கா ....சாம்பாரில் உப்பு சரி தானே! பாத்து சொல்லுங்களேன்."

இப்படி வீடே பரபரத்துக் கொண்டிருந்தது. குனிஞ்ச தலை நிமிராமல் நானும், என்னை அவ்வப்போது பார்க்கும் அவரும்....அமர்ந்திருந்தோம்.

ஒரே அமர்க்களமாய் இருந்த கல்யாண வீடு..சட்டென்று அலர்ட் ஆனது.

தெருவிலிருந்து உறவினர் ஒருவர் வந்து," அத்தை வராங்க! அத்தை வராங்க!" என்று கட்டியம் கூறுவது போல் சொல்லவும்,

அடுக்களையிலிருந்து பெண்கள் , கூடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்கள் என்று எல்லோரும்,"வந்தாச்சா...அத்தை வந்தாச்சா!" என்று கேட்டதிலிருந்து, அவர்கள் எல்லோரும், பதட்ட நிலைக்கு செல்வது புரிந்தது.

அவரின் தூரத்துப் பெரியம்மா அருகில் வந்து," அத்தை வந்ததும், உடனே ஆசீர்வாதம் வாங்கி விடுங்கள்" என்று எங்களைப் பார்த்து சொல்லவும், 

"ஏன் உடனே கிளம்பி விடுவாங்களா?" வெடுக்கென்று கேட்க நினைத்ததை, அப்படியே முழுங்கினேன்.
( அவசியமில்லாமல், வாயைத் திறக்காதே!இது நீ வாழப் போகும் இடம்.என்று மைண்ட் வாய்ஸ் எச்சரித்தது.)

அந்த வி.ஐ.பி அத்தையை எல்லோரும்,என் மாமியார் உட்பட தடபுடலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். என்னவர் 'அத்தை அத்தை' என்று தனி மரியாதை காண்பிக்கவும்.....

பிறகு ஒரு நாள் தனிமையில் ,"அந்த அத்தை என்றால் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமோ?" நான் கேட்க....சின்னதாய் ஒரு ஸ்மைல் செய்து விட்டு," அப்படியும் வைத்துக் கொள்ளலாம். "என்றார்.

"அப்படினா" நான் கேட்க...

"போகப் போகத் தெரியும்" என்று அவர் சொல்ல ...அதன் அர்த்தம் ஒரு சில மாதங்களிலேயே புரிந்து போனது.

" வி.ஐ.பி அத்தை மிகப் பெரிய ட்ரபிள் ஷூட்டர்" 
(அந்த வி.ஐ.பி அத்தையிடம் நான்  வசமாய் சிக்கி மீண்டது மிகப் பெரிய கதை)

சிக்கி மீண்ட பின் " அத்தையிடம் ஜாக்கிரதையாய் இரு" என்று என்னை அன்றே நீங்கள் அலர்ட் செய்திருக்கலாமே " என்று அவரிடம் கேட்டதற்கு,

அவர்," அத்தை நல்ல மனுஷி தான். எப்பவாவது கொஞ்சமே கொஞ்சம் எடக்கு மடக்கா ஏதாவது சொல்வார் அல்லது செய்வார்." என்று அலட்சியமாக சொல்ல...

விட்டுக் கொடுக்காமல் பேசும் அவரைத் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை வருடங்களாகியும், இப்பக் கூட அவர் சொன்னதையேதான் சொல்கிறார் (வி.ஐ.பி அத்தை பற்றி ) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த ஆண்களே இப்படித் தான் போலிருக்கு....இந்தக் காலம் என்றில்லை...கம்பர் காலத்திலிருந்தே இப்படித் தான் என்று நினைக்கிறேன்.

பின் என்ன? கம்பன் சொல்வதைப் பாருங்களேன்...

சீதா கல்யாணம் முடிஞ்சாச்சு..திவ்ய தம்பதியர் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்!

இப்ப கவனிங்க..

முதல்ல தசரதன் காலில் விழுந்தாச்சு. 

ஆச்சா?

இப்ப யார் கால்ல விழனும் ராமனும், சீதையும்? சொல்லுங்க...

வரிசைப் படி கோசலை கால்ல தானே! 

அதான் இல்லையாம் ...சீதை கரம் பற்றி அழைத்து நேரே போய்  கைகேயி காலில் விழுகிறானாம்  ராமன்.
(கோசலை...பாவம் என்ன நினைத்திருப்பாள்? )

அப்புறம் தான் கோசலையிடம்  ஆசீர்வாதம் வாங்குகிறானாம்.

அதற்குப் பிறகு சுமித்திரை... 

எதற்கு ராமன் (காலில் விழும்)ஆர்டரை மாற்றினான் என்றால்," கைகேயிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்." என்பதை சீதைக்கு சொல்லாமல் சொல்கிறானாம் ராமன் .

கொஞ்சம் வாயைத் திறந்து ராமன் சொன்னால் தான்  என்னவாம். "கைகேயி அம்மா ட்ரபிள் ஷூட்டர். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்."என்று வெளிப்படையாக சொல்லியிருந்தால் சீதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கைகேயிக்கு  'ஐஸ்' வைத்திருப்பாள் இல்லையா. காட்டிற்குப் போக வேண்டிய நிலையே வந்திருக்காது அல்லவா? 

அதனால் தான் சொன்னேன் ராமன் , கம்பன் முதல்  இன்றைய ஆண்கள் வரை தங்கள் வீட்டு உறவினரை விட்டே கொடுக்க மாட்டார்கள்...

கம்பன் எப்படி அதை சொல்கிறான் பாப்போமா?

பால காண்டம். கடி மணப் படலம் . பாடல் எண் 1339

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.



இராமன் சீதையுடன், கேகய மன்னனின் மகளான கைகேயியின் ஒளி மிகுந்த திருவடிகளை, தன்னைப் பெற்ற தாயான கோசலையினிடத்துக் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும், மிகுந்த அன்புடனே வீழ்ந்து வணங்கி,பின்பு தன்னைப் பெற்ற தாயான கோசலையின் இணைடிகளைத் தலைக்கு அணியாக சூடி, அதன் பின்பு உளத் தூய்மை மிக்கவளான சுமித்திரையின் திருவடிகளை வணங்கினான்.

கம்பனின் ராம காவியம் படிக்கப் படிக்க வியந்து போகிறேன்.
நீங்களும் தான் இல்லையா?

மீண்டும் ஒரு கம்பனின் பாடலுடன் சந்திப்போம்.


Wednesday, September 11, 2019

கம்பனும் , சாம்பாரும்..( கம்பன் என்ன சொல்கிறான் ?-3)

Image Courtesy : Wikkimedia Commons.

இன்றைக்கு என்ன சமையல் ? கேட்டுக் கொண்டே அவர் டேபிளில் அமர... என் இரண்டு  வாண்டுகளும் எதிர் எதிராக உட்கார ... எங்கள் வீட்டு டைனிங் டேபிள் களைக் கட்டியது.

"இன்றைக்கு வெண்டைக்காய் சாம்பாரும்,உருளைக் கிழங்கு  ரோஸ்ட் "என்றதும், வாண்டுகள் ஜாலியாக டேபிளில் தட்ட ஆரம்பித்தனர்....

குழந்தைகள் இருவருக்கும் உருளைக் கிழங்கு ரோஸ்ட் மிக விருப்பமான ஒன்று.

அதற்குப் பிறகு நடந்தது தான் சூப்பர்.

சுடச் சுட சாதத்தை பரிமாறியதும், சாம்பார் பாத்திரத்தை டேபிளின் நடுவில் நகர்த்தி விட்டு , தண்ணீர் ஜக் எடுக்க உள்ளே சென்றேன்.

"அம்மா சாம்பார்" மகன் குரல் கொடுக்க ,

"அங்கேயே டேபிள் மேல இருக்கு பார்"

"ஓ! இது சாம்பாரா?" என் மகள் குறும்பாகக் கேட்க....

"அதானே! இதுக்குப் பேர் சாம்பாரா?" என்னவரும் சேர்ந்துக் கொள்ள...

எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று நான் எட்டிப் பார்த்தேன்.

"அம்மா நான் ரசம்னு நெனச்சேன்" எங்கள் வீட்டு ராஜகுமாரன் கிண்டலடிக்க...

ராஜகுமாரி மட்டும் லேசுபட்டவளா என்ன?  "இது ரசம் இல்லடா. Two in One.  " அவள் சொல்லி சிரிக்க..

"இது சாம்பாரும் தான், ரசமும் தான்..."அவளுடைய நக்கல் தொடர்ந்தது...

இவரோ," இப்ப ரெண்டு பேரும் என்ன சொல்ல வரீங்க... "

"இது சாம்பாரா? இல்லை ரசமா? "

"இப்ப என்ன பட்டி மன்றமா நடக்குது இங்கே...பேசாம சாப்டுட்டு போய் படிங்க" என்று நான் அதட்ட....

இதெல்லாம் நடந்தது கிட்டத் தட்ட முப்பது வருடம் ஆகியிருக்கும். இன்று நினைத்தாலும் தேனாய் தித்திக்கும் நினைவுகள்.

அதுக்கு இப்ப என்ன வந்தது என்கிறீர்களா?

கம்பன் ராமனை வர்ணித்ததைப் படிக்கும் போது, எனக்கும் மலரும் நினைவுகள் .

அப்படி என்ன கம்பன் சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசையா...

இதோ கம்பன் என்ன சொல்கிறார் பார்ப்போமா....

ராமன், பின்னோடு சீதை, அவர்கள் பின்னால் இலக்குவன் என்று காட்டு வழியாகப் போய் கொண்டிருக்கிறார்களாம்.  அப்பொழுது ராமன் மேல் வெயில் படுகிறதாம். ஆனால் ராமன் மேனியின் பளபளக்கும் கருநீல ஒளியில்  சூரிய ஒளியே  மங்கி விட்டதாம். (என்ன உவமை!என்ன உவமை!) .

இத்துடன் நின்றாரா கம்பர். அவருக்கு அதில் திருப்தி இல்லை.

ராமனின் வண்ணம்.....மையோ?  கண் மை போன்ற கருமையோ! 

இல்லையில்லை, கரும் பச்சை நிறமான மரகதமோ!

ம்ஹூம்.....

மையோ! மரகதமோ! என்று சொல்லிக் கொண்டிருந்தவர். ....இல்லையில்லை... கடலின் கருநீலம் போலலவா இருக்கிறான் நம் நாயகன் என்று நினைத்து, மறி கடலோ என்று வர்ணிக்கிறார்.


ஆனால் கடலின் வண்ணமும், பரந்தாமனின் வண்ணத்தை முழுமையாக சொல்லவில்லை என்று தோன்றவே...

மழை தரும் கருமேக வண்ணம் என்று  சொல்லிப் பார்க்கிறார்.

ஆனால் அதுவும், அவருக்கு சரியாக படவில்லைப் போலிருக்கிறது.
எதை உவமையாக சொன்னாலும், அதற்கு ஒப்பாக மாட்டேன்கிறானே இந்த ராமன்.... எதைத் தான் உவமையாக சொல்வது என்று அசந்த கம்பன்....

" ஐயோ! அவனுடைய ஒப்பற்ற அழகை என்னன்னு சொல்றது " என்று கை தூக்கி சரணடைகிறார் போலும்.

(கவிச் சக்கரவர்த்தியையே அசரடித்து விட்டானே இந்த ராமன் !)

இத்தனைஅழகான ராமன், இடை என்ற ஒன்று இல்லாத சீதையுடனும், இலக்குவனோடும் காட்டு வழியே செல்கிறானாம்.

இதோ அந்த கம்பன் பாடல்..

வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!


அயோத்தியா காண்டம் ; கங்கை படலம். பாடல் எண் 1926

கண்ணுக்கு இடக் கூடிய மையோ! பச்சை நிற ஒளிக் கல்லாகிய மரகதமோ!அலைகள் மறிக்கின்ற கடலோ!பெய்யும் கார் மேகமோ! ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் இந்த ராமன்.சூரியனது ஒளியானது தன் திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் மறைந்து விடும்படியான நிறத்தையுடைய ராமன், இல்லையோ என்று சொல்லத்தக்க மெல்லிய இடையினையுடைய சீதையோடும், தம்பியாகிய இலக்குவனோடும் காட்டு வழியே நடந்து செல்லலானான்.

பாடலின் சந்தமும் நம்மை அசர அடிக்கிறது பாருங்களேன். 

கம்பனுக்கு ஒரு வேளை ராம தரிசனம் கிடைத்திருக்குமோ என்று தோன்ற வைக்கிறதல்லவா இந்தப் பாடல். 

 இருந்தாலும் இருக்கும்....

மீண்டும் இன்னொரு பாடலுடன் வருகிறேன்...

Friday, August 30, 2019

கம்பனும், செல்போனும்.(கம்பன் என்ன சொல்கிறான் ?-1)

Image Courtesy :  Wikkimedia Commons
நேற்று  காலை, அப்பொழுதுதான் வந்து அமர்ந்தேன். ஒரு கையில் நியூஸ் பேப்பரும், இன்னொரு கையில் என் செல் போனுமாய்....

என்னவர் அவருடைய செல்போனைப் பார்த்துக் கொண்டே...."இன்று இட்லியும், சாம்பாரும் சூப்பர் ராஜி." என்றாரே பார்க்கலாம்.

எனக்கு நிஜமாகவே "கனவா? நிஜமா?" என்கிற சந்தேகம் வந்தது.  என்னாச்சு இவருக்கு? நானாக அவரிடம் வலிந்து வலிந்துக் கேட்டாலும், ஒற்றை வார்த்தையில்  " நன்றாக இருந்தது" என்பாரே தவிர ... வேறு ஒரு பாராட்டும் வராது. இன்றென்ன ஒரு நாளும் இல்லாத திருநாளாய் பாராட்டித் தள்ளுகிறாரே நினைத்துக் கொண்டே அவரையே பார்த்தேன்.

என் சிந்தனையைக் கலைப்பது போல் ,

" டிங் டாங்"  வாசல் மணி .

அந்தப் பாராட்டிலிருந்து மனதை திசைத் திருப்ப மனமில்லாமல் ,
"கொஞ்சம் யாரென்று பார்க்கிறீர்களா?" அவரிடமே கேட்டேன்.

அவரோ," உனக்குத் தான் இருக்கும். அமேசானில் ஏதாவது ஆர்டர் செய்திருப்பாய்." என்று விட்டேத்தியாய்  சொல்ல..
சரி. இவர் எழுந்திருக்க மாட்டார் என்று புரிய... அவசர அவசரமாக எழுந்தேன் பாருங்கள்...

"டொப்" சத்தம்.

பார்த்தால் என் செல்போன் கீழே அனாதையாய் கிடந்தது.

அதற்குள் இன்னொரு "டிங் டாங்"

இப்பொழுது என்னவர் " செல் போனைப் பார்" சொல்லிக் கொண்டே கதவைத் திறக்க எழுந்தார். (முதலிலேயே செய்திருந்தால் என் செல் போனாவது பிழைத்திருக்கும். நினைத்துக் கொண்டே என் போனை நாடிப் பிடித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

" பரவாயில்லை பிழைத்தது." நான் சொல்லி முடிப்பதற்குள் என்னவர் என்னை பார்த்து ," கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு" என்று சொல்லவும் காத்திருந்தாற் போல் நான், " இப்ப எழுந்து கதவைத் திறந்ததை அப்பொழுதே செய்திருந்தால் ...."
நான் முடிப்பதற்குள்,"ஆக நான் தான் காரணம்னு  சொல்லு...நீ செல் போனை கீழே போட்டதற்கு?" அவர் கோபத்துடன் சொல்ல,

நானோ," இல்லை....இல்லை....நீங்கள் இல்லை அந்த டெலிவரி மனிதர் தான் காரணம்"

என்னவர்," எல்லோரையும் சொல்வாய். ஆனால் நீ கீழே போட்டாய் என்று ஒத்துக் கொண்டால் தான் என்ன?" சொல்லி விட்டு நகர்ந்தார்.

"சரி. ஒத்துக் கொள்கிறேன். என் விதி தான் காரணம் "

" ஒத்துக் கொள்ல மாட்டாயே." இப்பொழுதும் உன் விதி தான்.. நீயில்லை." என்று நக்கலடித்து விட்டு போனில் எதையோ படிக்க ஆரம்பித்து விட்டார்.

எனக்கு சட்டென்று கம்பன் பாட்டு ஒன்று நினைவில் வந்து மோதியது.

ராமன் பதினான்கு ஆண்டுகள் காடு போக வேண்டும். பரதன் நாடாள்வது என்கிற முடிவு அரண்மனையில் எல்லோர் காதுகளையும் எட்டியது. இளைய பெருமாளான லக்‌ஷ்மணன் காதை எட்டியது தான் தாமதம்,  கைகேயி மீதும், பரதன் மீதும் கோபம் கொப்பளித்துக் கொண்டு வருகிறதாம் லக்ஷ்மணனுக்கு.

ஆனால், ராமன் அவன் கோபத்தை அடக்கி விடுகிறார். எப்படி?

கம்பன் சொல்கிறான் எப்படி என்று....

"நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!"

என்றும் நீர் உள்ள ஆற்றிலே சில சமயங்களில்  நீர் இல்லாமல் வற்றிப் போகலாம்.. அது ஆற்றின் பிழையில்லையே! அது போல் தான்  என்னைக் காடு போக சொன்னது, தந்தை குற்றம் இல்லை..நம் தாயாகிய கைகேயின் குற்றமும் இல்லை... என்கிறானாம் ராமன்.

லஷ்மணன் மனதில் இப்படித் தோன்றியிருக்கலாம்." ஒரு வேளை ராமன் அண்ணா பரதன் தான் குற்றவாளி  என்கிறாரோ" என்று சிந்திப்பதற்குள் , "கைகேயின் மகனாகிய பரதன்  மேலும் குற்றம் இல்லை" என்று ராமன் சொல்லி விடுகிறார்.

(அப்ப ராமன் அண்ணா என்ன தான் சொல்ல வருகிறார்? என்று லஷ்மணன் குழம்பி நின்றிருப்பானோ)

"விதியால் விளைந்த குற்றமேயாகும். அதனால் நீ யார் மேலும் கோபம் கொள்ளாதே  " என்று ராமன் சொன்னதாக நம் கம்பன் முடிக்கிறார்.

காடு போகச் சொன்னாலும், ராமன் யாரையும் குற்றம் சொல்லாமல் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாரே!  என்று லஷ்மணனுக்கு மட்டுமில்லை நமக்கும் கூடத்தான் தோன்றுகிறது .இல்லையா!

ஆமாம். எங்கே நீ கம்பன் பக்கமெல்லாம் போகிறாய் என்று ஆச்சர்யப் படுகிறீர்களா? கம்பனின் ராமாயணம் தித்திக்கும் தமிழில் மனதைக் கொள்ளையடிக்கிறது. அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.. நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எதையாவது தவறாக சொல்லியிருந்தால்...தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்..  திருத்திக் கொள்கிறேன். சரியா?

மீண்டும், இன்னொரு கம்பன் பாடலுடன் சந்திப்போமா?(விடுவதாக இல்லை, உங்கள் எல்லோரையும்)