Tuesday, December 17, 2019

கம்பனும், ஆன்லைனும்.(கம்பன் என்ன சொல்கிறான் -15)


Image Courtesy : Raja Ravi Press (Public Domain)
" பாருங்க நீங்க சொல்ற பூத்தொட்டி ஆன்லைனில் கிடைக்குது. எத்தனை வேணும் நமக்கு?" அவரிடம் கேட்கவும்,

 'ஐந்து வேண்டியிருக்கும் நமக்கு' 

ஆர்டரும்செய்தாச்சு.

பிறகு அந்த ஆர்டர் பற்றி சுத்தமாக மறந்தும் விட்டேன்.

இரண்டு நாள் கழித்து....

"டிங் டாங்"

கதவைத் திறந்தேன்...... டெலிவரி பாய் .

கையில் பார்சல்.

"எங்களுக்கா?" குழப்பத்துடன் கேட்டேன்.

உள்ளேயிருந்து என்னவர்," பூத்தொட்டி ஆர்டர் செய்தோமே. மறந்துட்டியா?" என்ற சொன்னதும் தான் ... நினைவிற்கு வந்தது.

கையெழுத்திட்டு வாங்கினேன்.

"ஆமாம் . நாம் பெரிய தொட்டியல்லவா ஆர்டர் செய்தோம்." என்று சொல்லிக் கொண்டே  பார்சலைப் பிரித்தேன்.

எழுந்து ஹாலுக்கு வந்து கொண்டே ," ஏன் ...கொஞ்சம் சின்ன தொட்டியாக வந்துடுச்சா? " என்னவர் கேட்க..

"கொஞ்சம் சின்னதா?.....
 பேனா ஸ்டாண்டை விடவும் கொஞ்சமே கொஞ்சம் பெரிசு. அவ்வளவு தான்." என்று சொல்லிக் கொண்டே அவரிடம் காட்டினேன். 

ஆர்டர் செய்யும் போது அகல உயரத்தைக் கவனிக்காதது யார் தப்பு? சொல்லுங்கள்..... நாங்கள் தப்பாக கணித்து விட்டு.....?

இந்த மாதிரி தாடகையைத் தப்பாக கணித்து விடப் போறோமே என்று கம்பர் கவலைப்பட்டிருப்பார்  போல் தோன்றுகிறது.

அதனால் பால காண்டத்தில் தாடகையை எப்படி சிரத்தையுடன் வர்ணிக்கிறார் பாருங்கள்.

ராமன்,.. தாடகை என்கிற ஆக்ரோஷ பெண்மணியோடு சண்டைப் போட்டு ஜெயித்தான் என்ற நாம் சாதரணமாக நினைத்து விடக் கூடாதே என்று மெனக்கெடுகிறார்.

அவளுடைய பயங்கர  உருவத்தை எப்படி சித்தரிப்பது என்று ரூம் போட்டு யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். 


அவள் கால்களில் போட்டிருக்கும் சிலம்புகளுக்கிடையில்  பெரிய மலைகள் மாட்டிக் கொண்டு நெறிப் பட்டு நொறுங்கிப் போகின்றனவாம்.

அப்படியென்றால் எவ்வளவு பெரிய சிலம்பு? கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பெரிய சிலம்புகள் போட்டிருக்கும் கால்கள் எப்படியிருக்கும். அப்படியென்றால் தாடகை தோற்றம் எப்படியிருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறதல்லாவா!


மிகப்பெரிய உருவம் என்று சொல்லிக் காட்டி விட்டார். ஓகே! ஆனால் அவள் பலம் வாய்ந்தவள் என்று சொல்ல வேண்டுமானால் அவள் weight எவ்வளவு ?

அவளை 'வெயிட் மெஷினில்' நிற்க சொல்லியா weight பார்க்க முடியும். 

கம்பராச்சே ! அவருக்குத் தெரியாத டெக்னிக்கா?

சொல்கிறார் பாருங்கள்...

அவள் 'டங் டங் ' என்று பூமி அதிர நடக்கும் போது மலைகள் எல்லாம் நெறிப்படுவதுமில்லாமல் சில மலைகள் அவள் சிலம்பில் மாட்டிக் கொண்டு விட்டனவாம்.(கொலுசில் புடைவை மாட்டிக் கொள்வது போல)  அவளோ தர...தர... என்று மலைகளை இழுத்துக் கொண்டு அனாயசமாக நடந்து வருகிறாளாம்.

அது மட்டுமா! அவள் பாதம் வைக்கும் இடமெல்லாம் பெரிய பெரிய குழிகள் உருவாகிறதாம். அப்படி உருவான குழியில் கடல் நீர் ஓடி வந்து ரொம்பி விடுகிறதாம். 

ஆமாம் அயோத்தி அருகில் எங்கே கடல் வந்தது? என்று கம்பருடைய Geography புலமையை யாரும் சந்தேகிக்க வேண்டாம்.

தாடகை கால் வைத்ததால் ஏற்பட்டக் குழி, Sea Level ஐ விடவும் கீழே போய் விட்டிருக்கும்.  
அதனுள் கடல் நீர் ஓடி வர எத்தனை நேரம் பிடிக்கும் சொல்லுங்கள். ? உங்களுக்கு சுனாமி நினைவிற்கு வந்திருக்குமே.(கம்பருடைய கற்பனை கடலை விட ஆழமாக அல்லவா இருக்கிறது!)

அவளைப் பார்த்தாலே யமன் அஞ்சி நடுங்கி குகைக்குள் ஓடி ஒளிந்து கொள்வானாம்.

இப்பேர்பட்ட பயங்கரமான தாடகையை, இளைஞனான ராமன் வதம் செய்யப் போகிறான் என்று சொல்ல வருகிறார் கம்பர்.

தாடகையை விவரிக்கும் கம்பன் வரிகள் இதோ...
பால காண்டம். தாடகை வதைப் படலம். பாடல் எண்  389

சிலம்புகள் சிலம்பு இடை
    செறித்த கழலோடு
நிலம்புக மிதித்தனள்;
    நெளித்த குழி வேலைச்
சலம்புக, அனல் தறுகண்
    அந்தகனும் அஞ்சிப்
பிலம்புக, நிலை கிரிகள்
    பின் தொடர, வந்தாள்.

கால்களில் அணிந்த சிலம்புகளுக்கு இடையே  மலைகளைச் செறியும்படி வைத்த கால்களோடு நிலம் கீழே புகும்படி மிதித்தாள். அதனால் நெளியப் பெற்ற குழியில் கடல் நீர் புகுந்தது. அவளைப் பார்த்து நெருப்பென விழிக்கும் வலிமை மிக்க எமனும் பயந்து, குகைக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, நிலத்திலுள்ள மலைகளெல்லாம் பின்னே தொடர்ந்து  வர, தாடகை நடந்து வந்தாள்.

ராட்சசியான தாடகையை ராமனின் அம்பு எப்படிக்  கொன்றது என்பதைப் பிறகு பார்ப்போமா?

நன்றி.



Monday, December 9, 2019

கம்பனும், கொடியும்.(கம்பன் என்ன சொல்கிறான்-14)



Image Courtesy : Google.

" அங்கே பாருங்க .  அவள் கூப்பிடறாள் பாருங்க.."


"யாரு?.....யாரை?"

"நம்ம ரெண்டு பேரையும் தான்."

யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று கூட்டத்தின் நடுவில்.. கணவன் துழாவிப் பார்க்கிறான். யாரையும் காணவில்லையே....யாரை சொல்கிறாள் இவள் .

தி.நகர் தீபாவளி நெரிசலில் எளிதில் கண்டு பிடித்து விட முடியுமா என்ன?

"தெரியலையாங்க... அதாங்க  ...... வணக்கம் சொல்லி கூப்பிடுகிறாள் பாருங்க அந்தப் பெண்."

மனைவி யாரைக் காட்டுகிறாள் என்று புரிந்து போனது கனவனுக்கு.

ஜவுளிக் கடை பொம்மை.

அந்த ஜவுளிக் கடைக் கூட்டம் மட்டும் பயமுறுத்தவில்லை.பர்சின் கனமும், கணிசமாய் குறையுமே என்கிற பயம் தான் கணவனுக்கு. 

சாமர்த்தியமாக சமாளித்தான் கணவன்..
" அடி அசடே ! அந்த மெஷின் பொம்மை சொல்றது உனக்குப் புரியல ?

என்ன?

"நன்றி!.. வீட்டுக்குப் பத்திரமா போய் வாருங்கள் " அப்படின்னு சொல்லுது.  போகலாம் வா.. என்று கணவன் சொல்ல...மனைவி "க்கும்...."என்று கழுத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.


மெஷின் பொம்மை "வா" என்று சொல்வதில் என்ன அதிசயம் சொல்லுங்கள். 
மிதிலை நகரக் கொடிகள்  செய்வதைப் பாருங்கள்...

தூரத்தில் விசுவாமித்திரர், ராம லஷ்மணர்களுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  வயதானதால் ஏற்பட்ட அசதியோ என்னவோ... ஒரு சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் போலும்.
அவர் நின்றதும், பின்னால் வந்த தசரத குமாரர்களும் 'பிரேக்' அடித்தாற் போல் நின்று விடுகிறார்கள் .  குருவைத் தாண்டிப் போய் விடக் கூடாதல்லவா? அதோடு விசுவாமித்திரர் கோபம் பிரசித்திப் பெற்றதாயிற்றே. எதற்கு வம்பு ? அவர் வாயில் விழுந்து புறப்பட வேண்டுமா ? என்றும் இவர்கள் நின்றிருக்கலாம்.

சரி. எதற்கோ நின்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அதுவும் மிதிலைக்கு மிக அருகில்....

மிதிலையில் சீதாவின் சுயம்வரத்தை முன்னிட்டு கோலாகலமாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எங்கும் மலர்களாலும், கொடிகளாலும், தோரணங்களாலும்....

ராம லக்‌ஷமணர்கள் வருவதை முதலில் பார்த்தது இந்தக் கொடிகளாய் தான் இருக்கும். உயரத்தில் இருப்பதால்..

ராஜகுமாரி சீதையை மணமுடிக்கப் போகும் ராமன் வருவதைப் பார்த்து கொடிகள் மகிழ்ச்சியில்  ஒன்றொடு ஒன்று கைக் கோர்த்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தன. (தூக்குத் தோரணக் கொடிகள் - அதாவது மாவிலைத் தோரணம் போல் கட்டப்பட்டக் கொடிகள்.)

அவர்கள் பிரேக் போட்டதைப் பார்த்ததும், கொடிகள் ," என்னடா இது? இவர்களுக்கு மிதிலைக்கு வழித் தெரியவில்லையோ? Google Map பார்க்க வேண்டியது தானே." பேசிக் கொண்டனவோ.

"ராமா ..... வாடா.... ராமா...நீ எங்கே left, Right என்று திரும்பிப் பாக்கறே? மிதிலை இங்கே தான் இருக்கு.  உன் கரம் பற்றப் போகும்  சீதை இங்கு தான் இருக்கிறாள். " என்று கத்த வேண்டும் போல் இருந்திருக்கும்.

ஆனால் கொடி ஆயிற்றே! எப்படிக் கத்த முடியும் சொல்லுங்கள். 

அதனால்....master plan செய்து விட்டு கை கோர்த்துக் கொண்டு ரெடியாக காத்துக் கிடந்தன.

ஒரு பெரிய காற்று அடித்தது. தங்கள் பிளானை நிறைவேற்றிக் கொண்டன...எப்படித் தெரியுமா?

எல்லாம் ஒன்றாக காற்றில் மேலே பறந்து ராமனைப் பார்த்து," வா...வா...." என்பது போல் பட..பட...என்று அடித்துக் கொண்டனவாம்.

கம்பனுக்கு மட்டுமே இப்படியொரு கற்பனை உண்டாகும்..

இதை விவரிக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போமா...

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்: என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


காவல் மிக்க அந்த மிதிலை நகரம்," திருமகளானவள் குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து, நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால் என்னிடம் வந்து பிறந்துள்ளாள்" என்று கூறி பெரிய அழகிய கொடிகள் என்கிற தன் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டுவது, தாமரைப் போன்ற கண்களைக் கொண்ட ராமனை விரைவில் வந்து சேர்க என்று அழைப்பதைப் போன்றுள்ளது.

கம்பன் சொல்லும் காட்சி .....வீடியோவாய் உங்களுக்கு விரிந்திருக்குமே! ரசித்துக் கொண்டிருங்கள்....

வேறொரு கம்பனின் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்..
நன்றி.

Monday, December 2, 2019

கம்பனும், கொசுவும் ( கம்பன் என்ன சொல்கிறான் - 13)




பட உதவி ; www.dinakaran.com

'ஙொ....ய் ... 'சத்தம் சன்னமாய் வந்தது.
"காதருகில் 'கிசு கிசு' என்று கொசு என்ன ரகசியம் சொல்கிறது. " கிண்டலாக அவரிடம் கேட்டேன்.

" Please Wait. சீக்கிரமே உன் காதுக்கும் கொசு வழியாகவே அந்த ரகசியம் எட்டும்." அவரும் பதிலுக்குக் கிண்டலடிக்க, 
(கொசு விரட்டிக்கெல்லாம் 'பெப்பே' என்கிறது கொசு.)

கொசுவைப் போல வண்டுகளும் ரீங்காரம் செய்யுமே.

வாங்க...மிதிலைக்குப் போய் அதையும் பார்த்து விடலாம்.

மிதிலாபுரி சொர்க்கபுரியாக காட்சியளிக்கிறதே!
மக்களெல்லாம் என்ன மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஆடுவதும், பாடுவதுமாய்... இருக்காதா பின்னே. திருமகளே அங்கே அவதரித்திருக்கிறாளே! வளத்திற்கு என்ன குறைவு இருக்கப் போகிறது சொல்லுங்கள்.

சரி....விஷயத்திற்கு வருவோம்...வண்டுகளும் கூட்டம் கூட்டமாய் ரீங்காரம் செய்கின்றன.

அப்படி என்ன தான் ரகசியம் பேசுகின்றன? கேட்போமா?

" எதுக்கடி இப்படி கத்தறே..அதுவும் என் காது கிட்ட வந்து?"

" அதுவா... அங்க பார். அந்தப் பெண்ணை ."

" ஏன் அவளுக்கு என்ன?"

அதற்குள் இன்னொரு வண்டு வீல் என்று அலற,

'உனக்கென்ன ஆச்சு?'

'அந்தப் பெண் படும் பாட்டைப் பார். எனக்குப் பயமா இருக்கு.'

கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவு வண்டுகளும் பதட்டத்துடன் பேசிக் கொள்கின்றன.

'எனக்கும் பயமா இருக்குடி. இந்தப் பெண்கள் ஆடும் ஆட்டத்தில் அவர்களின் மெல்லிய இடை வலிக்காதோ? எவ்வளவு மெல்லிய இடை. ஆட்டத்தின் அதிர்ச்சியைத் தாங்குமா?  '

இதைத் தான் அந்த வண்டுகள் பேசுகின்றனவாம்.

அப்படி என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் மிதிலாபுரி பெண்கள்?

ஊஞ்சல் தான்..... வேறொன்றுமில்லை.

எங்கே இருக்கு ஊஞ்சல்?

பாக்கு மரத்தில்.....


சரி... இந்த வண்டுகள் எங்கிருந்து வருகின்றன. வேறெங்கேருந்து? பெண்கள் வேகமாக ஆடும் போது, அதிர்ச்சியினால் அவர்கள் சூடியிருக்கும் பூக்களிலிருந்து தான் மேலே எழும்பியிருக்கின்றன. 

அவை மேலே எழும்பும் போது ஏற்படும் ஆரவாரம், பெண்களின் இடைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதைப் போல் இருந்ததாம் கம்பருக்கு. (கற்பனையில் கம்பருக்கு இணை கம்பரே!)


'மாசுறு பிறவி போல'  ஊஞ்சல் ஆடுவதை வர்ணிக்கிறார்.
 இறைவனடி சேர்வதும், பிறப்பெடுப்பதும் எப்படி மீண்டும் மீண்டும் நடைபெறுகிறதோ அப்படி ஊஞ்சல் முன்னும் பின்னுமாய் ஆடுகிறதாம்.
(கம்பரைத் தவிர யாரால் இப்படி ஊஞ்சல் ஆடுவதற்கு உவமை சொல்ல முடியும், சொல்லுங்கள்.)

ஒரேயடியாக தத்துவத்தில் நம்மை மூழ்கடித்து விடாமல் ' மைந்தர்  சிந்தையொடு உலவ' என்று சட்டென்று ஜனரஞ்சகமாக சொல்லி முடிக்கிறார்.
அதாவது, இடை மெலிந்த அழகான பெண்கள் ஊஞ்சலாடும் போது, அவர்களைப்  பார்க்கும் இளைஞர்கள் மனமும் கூடவே ஆடியதாம்.

பால காண்டம் . மிதிலைக் காட்சிப் படலம். பாடல் எண். 573.

பூசலின் எழுந்த வண்டு 
  மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல 

  வருவது போவது ஆகிக்,
காசு அறு பவளச் செங்காய் 

   மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் 

 சிந்தையொடு உலவக் கண்டார்.  

குற்றம் அற்ற பவளம் போல சிவந்த காய்களையுடைய, மரகதம் போல பச்சை நிறப் பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே பெண்கள் ஆடுகிறார்கள். குற்றம் நிறைந்த பிறவி போல (மாறி மாறி) வருவதும், போவதுமாக ஊஞ்சல்  ஆட, (பார்க்கும்)  ஆண்களின் மனமும் கூடவே ஆடுகின்றன. ஆரவாரத்தோடு மேலே எழுந்த வண்டுகள் அவர்கள் இடையின் மென்மைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதையும் (ராம லக்குமணர்) பார்த்தார்கள்.  

ஒரு வீடியோ பதிவைப் போல் இருக்கும் இந்த  வரிகளில் மெய் மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறதே!

இன்னொரு கம்பர் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.